Search This Blog

Monday, June 22, 2009

இந்திய பாசிசம்

 


 

இந்திய பாசிசம்

பாசிசம், இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் ஐரோப்பாவை ஆட்டிப்படைத்த பூதம், பிறகு உலகையே கபளீகரம் செய்ய முயன்று தோற்றுப் போனது. வரலாற்றின் ஒரு காலகட்டத்தில் இது ஏன் தோன்றுகிறது? ஏற்றத்தாழ்வான உலக அமைப்பில் ஆதாயம் காணும் கூட்டத்திற்கும், அந்த ஏற்றத்தாழ்வை நீக்குவதற்காக இடைவிடாது மறைமுகமாக நடந்து கொண்டிருக்கும் போராட்டத்தில், ஆதாயம் காணுபவர்களின் கை தாழும் போது ஜனநாயகம் மற்றும் இதர கோட்பாடுகளை காலில் போட்டு மிதித்துவிட்டு அராஜக வழிமுறையில் இறங்கும் காலமே பாசிசத்தின் வளர்ச்சி காலமாக இருந்திருக்கிறது. பாசிசம் தன்னை எப்படி நிலை நிறுத்திக் கொள்கிறது? முதலில் ஒரு குறிப்பிட்ட சிறுபான்மை மக்களை தேர்ந்தெடுத்து அவர்களை எதிரிகள் என்ற மாயையை உருவாக்கும். எப்படி மாயையை உருவாக்கும்? பொய் மட்டுமே அடித்தளமாக வைத்து அதையே திரும்பத் திரும்பச் சொல்லி, கூறப்படும் பொய்களுக்குள் உண்மை இருக்கிறதா என்ற விவாதத்தை நடத்தவிடாமல் பொய்க்குள் உள்ள விஷயத்தையே விவாதப் பொருளாக்கி, மேலும் மேலும் பெரும்பான்மையினரை தன்னை நோக்கி இழுக்க வைப்பதே இதன் தந்திரம் இதில் அதிதீவிரமாக கவர்ந்திழுக்கபடுவர்களை indoctrinate செய்து வதந்திகளை உற்பத்தி செய்யும் இயந்திரங்களாக மாற்றிவிடும் தன்மையுடையது. இந்த வதந்தி, பொய் உற்பத்தி செய்யும் இயந்திரங்களை மேலும் செயல்படுத்தி மேல் அதிகமான பிரசாரத்தில் ஈடுபட்டு மக்களை அதிக எண்ணிக்கையில் ஈடுபட வைக்கும் செயல்பாட்டை உடையது. இந்த செயல்பாட்டை கேள்வி கேட்பவர்களெல்லாம் இரண்டாவது எதிகளாக சித்தரிக்கப்டுவர். இதில், பாசிசத்தின் அடித்தளத்தை கேள்விக்குள்ளாக்குபவர்கள், ஜனநாயக வாதிகள் தாராளவாதிகள், தனிநபர் சுதந்திரத்தை வலியுறுத்துபவர்கள், எதையும் பகுப்பாய்வு செய்து முடிவெடுப்பவர்கள், ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக இடைவிடாது போராடிவரும் கம்யூனி°ட்கள். இப்படியாக செயல்படும் பாசிசம் ஒரு உச்ச கட்டத்தை எட்டி பின் தானே அழிந்துவிடும் தன்மை கொண்டது. அதற்குள் மனித சமூகத்தில் பல நாசகரமான விளைவுகளை ஏற்படுத்திவிடும். ஆனால் இன்றும் பாசிசத்தின் சிற்சில கூறுகள் உலக சமூகத்தில் ஆங்காங்கே வாழ்ந்து வருகின்றது. சில இடங்களில் ஒரு கட்டம் வரை வளர்ந்து மடியும். சில இடங்களில் ஜெர்மனியில் ஏற்பட்டது போல் வளர்ச்சி பெற்று மடியும். ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் இருக்கின்றன என்ற பொய்யைச் சொல்லி போரைத் தொடுத்து ஏராளமான மக்களை கொன்று குவித்ததை பாசிசத்தின் ஒரு கூறு எனலாம். இந்தப் பொய் திரும்பத் திரும்ப கூறப்படும் பொழுது அங்குள்ள மக்கள் இந்த பொய்யை எதிர்த்து கேள்வி கேட்கத் தயங்குகிறார்கள். உண்மை வெகுவிரையில் அம்பலமாகி அது தேர்தல் முடிவுகளில் பிரதிபலிக்கிறது.
 
 
இந்தியாவிலும் ஏற்றத்தாழ்வு வளர்ந்து வரும் வேத்திற்கு ஏற்றாற்போல் பாசிசம் வேகமாக வளர்ந்து வருகிறது. பாசிசத்தின் இந்திய வடிவமானது மத சிறுபான்மையினரை எதிரிகளாக சித்தரிக்கின்றது. இதன் இரண்டாவது எதிகளானவர்கள் இந்திய பாசிசத்தை கேள்வி கேட்பவர்கள், கூறும் பொய்களை பகுப்பாய்வு செய்து நிரூபிப்பவர்கள், ஏற்றத்தாழ்வுக்கெதிராக போராடிவரும் பல்வேறு வகை கம்யூனி°ட்கள். இங்கும் indoctrination நடைபெற்று வருகிறது. பேராசியர் Noam Chomsky கூறுவது போல் "Manufacturing Concent" நடைபெற்று வருகிறது. பகுப்பாய்வு செய்யும் தன்மையை அறவே ஒழித்துக் கட்ட முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இவர்களை எல்லாம் வெற்று அறிவு ஜீவிகள் என்றும் மேல்நாட்டு கருத்தியலுக்கு இரையாகிப்போன படித்தவர்கள் என்றும், போலி மதசார்பின்மை வாதிகள் என்றும் தூற்றி வருகிறது. இது மட்டுமல்லாது இந்திய சமூகத்திற்கு மட்டுமிருக்கும் பிரத்யேக பிரச்சனையான ஜாதிய ஏற்றத்தாழ்வு மற்றும் ஒடுக்குமுறையிலும் உயர்சாதி நிலைபாட்டை எடுத்து இயங்கி வருகிறது. பொய்களை உற்பத்தி செய்யும் இயந்திரங்களை அறிவுஜீவிகளாக சித்தரிக்க முற்படுவார்கள். எந்தவொரு அறிவு ஜீவியும் Experiment – Observation – Inferrence என்ற வரிசையில் இயங்கும் பொழுது, இந்திய பாசிசத்தின் பொய் உற்பத்தி அறிவு ஜீவிகள் Inferrence – Observation - Experiment என்ற எதிர் வரிசையில் இயங்கி வருகிறார்கள்.
 
இப்படிப்பட்ட நடைமுறைகள் நம்முடைய குழுமத்திலும் அவ்வப்போது inject செய்யப்பட்டு வருவதை நம்மால் அடிக்கடி காணமுடிகிறது. நேரு குடும்ப பட்டியல் ஒன்று வெளியிடப்பட்டு அவர்களுடைய சொந்த மதப்பற்று பற்றி கூறி இதுதான் இந்தியாவின் போலி மதசார்பின்மையின் தோற்றம் என்று கூறப்பட்டது. இதன் அடிப்படை பொய்யே இந்திரா காந்தியும், ராஜீவ் காந்தியும் இந்து அல்லாத மதங்களுக்கு சென்றவர்கள் என்பது. அதை உண்மையென ஏற்றுக் கொண்டு அதனால் வரும் நன்மை தீமைகளை விவாதிக்கும் திசைக்கு விவாதம் இழுத்துச் செல்லப்பட்டது. இது 5 வருடங்களில் எனக்கு 5 முறை இந்த மெயில் வந்து என்னுடைய பதிலை அனுப்பியிருக்கிறேன். ஆனாலும் மீண்டும் மீண்டும் வருகிறது. எவ்வளவு பேர் கேள்வி கேட்பார்கள் என்ற தைரியத்தில் மீண்டும மீண்டும் வருகிறது. இதே போல் முஸலீம்களின் மக்கள் தொகை பெருகி 2050ல் இந்துக்களை சிறுபான்மையினராக்கி விடுவார்கள் என்ற மெயில் எனக்கு அடிக்கடி வருகிறது. இதுவும் ஒரு அப்பட்டமான பொய் என்று சென்னையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஆஷா கிருஷ்ணகுமார் நிரூபித்துள்ளார். புகழ்பெற்ற கல்வியாளரான மால்கம் ஆதிஷேஷையா மத்திய அரசிடமிருந்து பெற்ற விருதின் பணத்தால் துவங்கப்பட்ட Madras Institute of Developmental Studies என்ற நிறுவனம். இதன் ஆராய்ச்சியாளராக பணியாற்றியவர் ஆஷா கிருஷ்ணகுமார். 1901ம் ஆண்டிலிருந்து 1991ம் ஆண்டுவரை ஏற்பட்ட ஜனத்தொகை மாற்றங்களையும் இந்திய மக்களின் வெவ்வேறு மதப்பிரிவினர்களின் குழந்தைபெறும் வேகம் (Fertility Rate) கல்வியறிவு (Literacy Rate) தனிநபர் வருமானம் (per capita income) ஆகியவற்றை வைத்து ஆய்வு நடத்தியதில் இந்திய ஜனத்தொகையில் முஸலீம்களின் விகிதாச்சாரத்தில் 90 ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட வில்லை யெனவும் குழந்தைபெறும் வேகத்திற்கும் கல்வியறிவின்மைக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது பற்றியும், வெவ்வேறு மதப்பிரிவினரிடையே பலதார மணம் புரிந்தவர்களின் விகிதாச்சாரம் மதரீதியாக அனுமதியளிக்கப்பட்ட முஸலீம்களை விட (5%) மத ரீதியாக அனுமதிக்கப்படாத இந்துக்களிடம் (6%) அதிகம் எனவும் கிட்டத்தட்ட 5 வருடம் பல்வேறு கள ஆய்வுகள் செய்து ஆய்வை நடத்தி வெளியிட்டிருக்கிறார். எனினும் வதந்தி பொய்கள் மீண்டும் மீண்டும் உலா வருகிறது.
 
அடுத்து சீனாவைப்பற்றி சுற்றிவரும் வதந்தி. இதை கிளப்பிவருபவர்கள் தங்களை திபெத்தின் நிபுணர்கள் போன்று இடைவிடாது திபெத்தை சீனா கபளீகரம் செய்து விட்டது என்று எழுதி வருகிறார்கள். திபெத் தனிநாடாக இருந்தபொழுது திபெத்தை மன்னராட்சி முறையில் ஆண்டுவந்த லாமா 1952ம் வருடம் ஒரு ஒப்பந்தத்தின மூலம் சீனாவில் மனமுவந்து இணைத்தார். மன்னராட்சி தொடருவதற்கு அனுமதியில்லை என்று ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது. சுயாட்சி கவுன்சில் அமைக்கப்பட்டு இதுதான் அரசியல் அதிகாரம் உடைய அமைப்பாக இயங்கி வந்தது. எனினும் கவுன்சிலை லாமா தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர செய்த முயற்சி தோல்வியடைந்ததை ஒட்டி, ஒப்பந்தம் மறு பேச்சுவார்தைக்கு உட்பட வேண்டும் என்ற கோரிக்கையை 1956ம் ஆண்டு சீன மக்கள் காங்கிரஸில் வைத்தார். இது நிராகரிக்கப்பட்டவுடன் தனிநாடு கோரி போராடி வருகிறார். அவருக்கு அங்கு மெஜாரிட்டி ஆதரவு கிடையாது அப்படி ஏதேனும் இருந்திருந்தால் நீண்டகாலம் அடக்கி வைக்க முடியாது.தற்போது தனிநாடு கோரிக்கையை கைவிட்டு அதிக அதிகாரம் வேண்டும் என்று கோரி பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். லாமாவின் நிலப்பிரபுத்துவ ஆட்சி எவ்வளவு கொடுமையாக இருந்திருக்கிறது என்று திபெத் சீனாவில் இணைவதற்கு முன் எழுதப்பட்ட புத்தகங்கள் ஏராளம். சிறு சிறு நாடுகளின் உள்விவகாரங்களில் கூட தலையிடும் அமெரிக்காவால் கூட லாமாவை பகிரங்கமாக ஆதரிக்க முடியவில்லை. திபெத் மக்கள் லாமா ஆட்சி திரும்புவதை விரும்பவில்லை. எனவேதான் ஐம்பதாண்டுகாலமாக அவர் நடத்திவரும் இயக்கம் திபெத் மக்களிடமும் உலக மக்களிடமும் எந்த Impactஐயும ஏற்படுத்த முடியவில்லை.
 
இந்திய-சீன எல்லை பிரச்சனை பற்றி கிளப்பிவிடப்படும் வதந்திகள் ஏராளம். 1962ல் ஒரு சில நாட்கள் நடந்த மோதலை ஒட்டி எல்லை பிரச்சனையை பேச்சு வார்த்தை மூலம் தீர்வுகாண முடிவு செய்து இரு பக்கத்திலும் விஷேஷ கமிட்டிகள் அமைக்கப்பட்டு பல சுற்று பேச்சு வார்த்தைகள் நடைபெற்று விட்டன. பேச்சு வார்தைகள் தொருகின்றன. இரு தரப்பிலும் எந்தவிதமான Claim இருக்கிறது என்று இதுவரை அதிகார பூர்வமாக வெளியிடப்படவில்லை. பிரிட்டிஷ் அரசு ஏற்படுத்திய மாக்மோகன் கோட்டை இரு நாடுகளையும் பிரிக்கும் எல்லைக் கோடாக இருக்க முடியாது என்பதிலும் எல்லைகள் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்பதிலும் இரு நாடுகளுக்கும் ஒத்த கருத்து இருக்கிறது. இதற்கு நடுவில் சீன ஊடுறுவல் என்ற செய்தி மட்டும் அவ்வப்போது அரசு அல்லாத வட்டாரங்களிலிருந்து வந்து கொண்டிருக்கிறது. ஊடுறுவல் சம்பந்தமாக அரசு எடுத்த நடவடிக்கை என்ன. சீன அரசின் கவனத்திற்கு இந்திய அரசு கொண்டு சென்றதா என்பதைப்பற்றி எந்த செய்தியும் இதுவரை வெளியாகவில்லை. இதுமாதிரி  அத்து மீறல்கள் நடக்கும் பொழுது Diplonmats மட்டத்தில் ஆட்சேபனைக் கடிதங்கள் பரிமாறப்படும். அதுவும் நடைபெற்றதாக தகவல் இல்லை . எனினும் சீன அத்துமீறல் என்று செய்தி அனுப்பினால் நாம் பகுப்பாய்வு செய்யாமல் உடனே கொதித்தெழ வேண்டும் இல்லையென்றால் நாம் தேசப்பற்று இல்லாதவர்கள் என்ற பாணியில் பிரசாரம் நடைபெறும்.
 
இந்திய பாசிசம் தேசப்பற்று பற்றி வெற்றுக் கூச்சல் எழுப்பும். உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு அதன் நடுநிலைத் தன்மையையும் நியாயவாதத் தன்மையும் பொருத்து இருந்தது, இருக்கிறது. ஆனால் இவர்களின் அப்பட்டமான அமெரிக்க ஆதரவு நிலைபாடானது, இந்திய அமைச்சர்கள் பாதுகாப்பு சோதனை என்ற பெயரில் நிர்வாணப்படுத்தப்பட்டாலும், இந்தியர் என்ற ஒரே காரணத்திற்காக எவ்வளவு உயர்ந்த தகுதி இருந்தாலும் அவரை ஐக்கிய நாடுகள் சபையின் செகரட்டரி ஜெனரலாக வரவிடமாட்டேன் என்ற ஆணவத்தில் அமெரிக்கா தடைபோட்டாலும் இவர்களுடைய தேசப்பற்று கிணற்றிலிருந்து ஒலிக்கும் குரலாகக் கூட ஒலிக்காமல் அமெரிக்க விசுவாசத்தனத்தை வெளிப்படுத்துவார்கள். இளைய பங்காளியாக வைத்துக் கொண்டே அணுகுண்டு வெடிக்கும் உரிமையை பறித்து விட்டதே என உள்ளுரில் குரல் எழுப்புபவர்கள் காண்டலிசா அம்மையார் வரும் பொழுது அவரிடம் இது குறித்து ஒருவார்த்தை கூட கேட்காது மோடிக்கு விசா வேண்டும் என்று பேச்சுவார்த்தை நடத்தி தேசப்பற்றை வெளிப்படுத்துவார்கள்.
 
சமீபத்தில் நம்முடைய குழுமத்தில் இவர்களுடைய அறிவுஜீவியாக அறிமுகப்படுத்தப்பட்டவர் பிராங்கோயிஸ கௌடியர் . இவர் 19 வயதில் இந்தியாவிற்கு வந்து பாண்டிச்சேரி ஆரோவில்லில் மதப்பயிற்சி பெற்று பிறகு இந்துத்வ வாதியானவர் என்று விக்கிபீடியா கூறுகிறது. இவருடைய Record எல்லாம் இந்திய சிறுபான்மையினருக்கு எதிராக அவதூறு பொழிவது மட்டும்தான். இவருடைய Historiographic Methodology எந்தவித தர்க்க ரீதியான அணுகுமுறையும் கிடையாது ஆதாரங்களையும் சான்றுகளையும் ஆய்வு செய்யும் முறை கிடையாது. ஆனாலும் தன்னை ஒரு வரலாற்று நிபுணர் என்று தனக்கு தானே கூறிக் கொள்பவர். இந்திய சமூகம் பற்றி ஆழமான பார்வையும் இவரிடம் கிடையாது. 90 சதவீத மக்களை சூத்திரர்கள் என்று முடிவெடுக்கும் நிலையிலிருந்து ஒதுக்கி வைத்து , கல்வியறிவை மறுத்து 10 சதவீதத்தினருக்கு சேவை செய்வதே கடவுள் இவர்களுக்கு இட்ட கட்டளை என்று 2000 ஆண்டுகளுக்கு மேலாக ஒடுக்கி வைத்த சாதிய ரீதியான ஏற்றத்தாழ்வான சமூகம் நம் சமூகம். இந்த சமூக ஏற்றத்தாழ்வை களைய பல்வேறு சமூகவியலாளர்களும் அறிஞர்களும் பல்லாண்டுகளாக ஆய்வு செய்து கொண்டு வந்த சமூக நீதிக் கொள்கைதான் இட ஒதுக்கீடு கொள்கை. ஆரம்பகட்டத்தில் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக போராடிய இந்திய பாசிசவாதிகள் இறுதியில் ஏற்றுக் கொள்வதாக நடிக்க ஆரம்பித்தார்கள். நீதியரசர் வீ. ஆர். கிருஷ்ணய்யர் முதல் சின்னப்ப ரெட்டி வரை இடஒதுக்கீடு அரசியல் சட்டப்படி செல்லும் என்று தீர்பளித்திருக்கிறார்கள். இதன் உச்சகட்டமாக அமைக்கப்பட்டது மண்டல் கமிஷன் 4 ஆண்டுகள் கடுமையாக உழைத்து Tata Institute of Social Studies, Jawaharlal Nehru University போன்ற உயர்கல்வி நிறுவனங்களின் சமூகவியல் துறை பேராசிரியர்களிடமிருந்து ஆய்வுக் கட்டுரைகள் பெற்று மேலும் பல்வேறு அறிஞர்களிடமிருந்து 150 Working Papers பெற்று (அனைத்தும் மண்டல் கமிஷன் அறிக்கையின் பின்னிணைப்புகளாக உள்ளது) இட ஒதுக்கீடு கொள்கையை பரிந்துரை செய்தது. சமூக ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்கள், உயர் சாதியினரின் ஆதிக்கத்தை தாக்குப் பிடித்து அதற்கு சமமாக உயரவேண்டும் என்றால் மூன்று தலைமுறையாவது இடஒதுக்கீடு பெறவேண்டும் என்பதே சமூகவியலாளர்களின் கணிப்பு. மண்டல் கமிஷன் பரிந்துரையும் இதைவே வலியுறுத்துகிறது. தமிழகத்தில் இரண்டு தலைமுறையினர் இடஒதுக்கீடு கொள்கையால் பலனடைந்ததை பொறியில், மருத்துவ கல்லூரிகளில் அனுமதி மதிப்பெண்களில் உள்ள இடைவெளி கடந்த பத்தாண்டுகளில் கணிசமாக குறைந்திருப்பதிலிருந்து காணமுடிகிறது.  இதில் ஒரு பிரிவினர் இன்று இந்துத்வா சக்திகளுக்கு ஆதரவாக போகும் அறிவு நிலைக்கு உயர்த்தப்பட்டதே அவர்களை மனுவின் பிடியிலிருந்து மீட்டெடுத்து அவர்களின் தகப்பனார்களுக்கு கல்வியளித்த இடஒதுக்கீடும் சமூக நீதியும் தான். ஆனால் இந்தியாவில் இதர பகுதிகளில் இந்த நிலை இல்லை. சாதிய பிரச்சனை ஒரு சிக்கலான பிரச்சனை கௌடியர் இதைப்பற்றி கூறுகையில் இட ஒதுக்கீட்டில் பலன் பெற்றவர்களை நீக்க வேண்டும் என்கிறார். http://www.hindusta n.org/forum/ showthread. php?t=3314 முழுக்கிணற்றையும் தாண்டினால் தான் ஆதிக்க சாதிகளை சமாளிக்க முடியும் என்ற அறிஞர்களின் கருத்துக்களுக்கு எதிராக சமூக நீதியை சாகடிக்கும் குரலாக கௌடியர் குரல் ஒலிக்கிறது. அதனால் தான் இவருக்கு நல்பத்திரிக்கையாளர் விருது  வாஜ்பாய் அரசாங்கத்தால் வழங்கப்பட்டிருக்கிறது
 
தீவரவாதம் பற்றி தீவிர குரல் எழுப்புவார்கன். இவர்களே சட்டத்தை கையிலெடுத்துக் கொண்டு படுகொலை செய்வார்கள்.கேட்டால் இந்துக்களின் கோப வெளிப்பாடு என்பார்கள். இதுவும் திருப்தியளிக்கவில்லை என்றால் குண்டு வைப்பார்கள். சில இராணுவ உயரதிகாரிகள் கூட இராணுவத்திற்கும் நாட்டிற்கும் விசாவாசமாக இருப்பதைவிட அவர்கள் சார்ந்த இயக்கத்திற்கு விசுவாசமாக இருப்பார்கள். பிறகு குற்றம் சாட்டப்பட்டவர்களை அழிச்சாட்டியம் செய்து காப்பாற்ற முனைவார்கள்.
 
தேச ஒற்றும் பற்றி ஓங்கி ஒலிக்க பேசுவார்கள். இரண்டு மாநிலங்களுகிடையிலான நதிநீர் பிரச்சனை என்றால் பிரதேச வெறி நிலைபாடு எடுத்து பிரதேச மோதலை தூண்டி விடுவார்கள்.பிறகு சீனாதான் காரணம் என்று தைரியமாக கவிதை எழுதுவார்கள்.
 
இப்படிப்பட்ட பாசிச சக்திகள் இந்தியாவில் வளர்ந்து வரும் கால கட்டத்தில் நாம் இருக்கிறோம் ஏனென்றால் பொருளாதார ஏற்றத்தாழ்வு என்பது படுவேகமாக வளர்ந்து அதன் உச்சத்தில் இன்று இருக்கிறது. இந்த சூறாவளிக்குள் ஒரளவு பாதுகாப்பாக இருக்கும் நாம் இதை பகுப்பாய்வு செய்து புரிந்து கொள்வதிலோ, எதிர்வினை புரிவதிலோ சுணக்கம் இருக்காது என்று நம்புகிறேன்.

.

__,_._,___

No comments:

Six C's of Character - Yasir Fazaga