Search This Blog

Saturday, December 23, 2006

அன்பு நண்பனுக்கு

அன்பு நண்பனுக்கு

மௌலானா அஸத் கீலானி

அன்பு நண்பா,
என்ன படிக்க வேண்டும் என்று கேட்கிறாய்…!
குர்ஆன்தான். குர்ஆனிலும் மறுமை குறித்தும், மறுமை நாளின் நிலைமைகள் பற்றியும் விவரிக்கிற வசனங்களைத் திரும்பத் திரும்ப ஓது. அவற்றின் பொருளை வாசி. அவற்றுக்கு அறிஞர்கள் கொடுத்துள்ள வாசகங்களை ஆய்ந்து படி. நபிமொழிகளில் கிதாபுல் ரகாக் பகுதியை வாசி. இவற்றோடு அண்ணல் நபிகளாரின் அழகிய வரலாற்றையும் நபித்தோழர்களின் சீரிய வரலாற்றையும் வாசி. இவை யாவும் உன்னை 1400 ஆண்டுகளுக்கு முந்தைய அந்த சமூகச் சூழலுக்கே கொண்டு சென்று விடும். உள்ளம் புத்துணர்வு பெறும்.
தாம் ஏற்றுக் கொண்டிருந்த அழைப்பு பணியை வெற்றிகரமாக, நேர்த்தியாக, அழகாக செய்து முடித்தவர்கள், அவர்கள். அவர்களின் ஒளிமயமான வாழ்க்கைதான் களைத்துப் போன பயணிகளுக்கு கலங்கரை விளக்கங்களாக பாதை காட்டும். மகிழ்ச்சி ஊட்டும். முடிந்தால் திருமறையின் முப்பதாவது பாகத்தில் மறுமை நிலைமையைப் படம் பிடித்துக் காட்டும் அத்தியாயங்களையும், உள்ளங்களை நடுநடுங்கச் செய்து விடும் அத்தியாயங்களையும் படி.
நேர்வழியில் சென்ற கலீபாக்கள் நால்வரின் வரலாற்றையும் படி. இவர்கள்தான் அசலானவர்கள். இவர்களின் காலடிச் சுவடுகளைப் பின்பற்றியே நாம் அசல் பணியாற்ற வேண்டியுள்ளது என்கிற எண்ணத்துடன் இவர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் புரட்டிப் பார்.
அவர்களும்தான் வணிகம் செய்தார்கள். ஆனால் தராசின் ஒரு தட்டில் உலகப் பொருட்கள் இருந்தால் மறு தட்டில் இறைவனின் அச்சம் இருக்கும். துணிகளை அளக்கும் போது அவர்களுக்கு ஒரு நுனியில்தான் துணி தெரியும். மறு நுனியில் மண்ணறையின் முகத்துவாரம் தெரியும்.
ஒரு பக்கம் பெரும் பெரும் நிலப்பரப்புகளிலும் நாடுகளிலும் அவர்களுடைய ஆட்சி கொடி கட்டிப் பறக்கும். மறுபக்கம் இரவுகளில் இறைவன் முன்னால் அழுது அரற்றி, ஏ! உலகமே ! என்னை விட்டு விலகிப் போய் விடு ! என்னை மயக்கி விடாதே! நான் உனக்குத் தலாக் கொடுத்து விட்டேன் என்று புலம்புவார்கள்.
இவர்கள்தான் முன்மாதிரிகளாக, உலகின் வழிகாட்டிகளாக இருந்தார்கள். அவர்களைப் போன்றவர்கள் உலகில் பிறந்தே கிடையாது. அவர்களின் அடிச்சுவடுகளின்தான் நாம் பயணிக்க வேண்டும். நமக்கு அந்த நற்பேறு மட்டும் கிடைத்து விட்டது எனில், என் நண்பனே! வாழ்க்கை பெரும் பெரும் தங்கச் சுரங்கங்களை விட மதிப்பு மிக்கதாக ஆகி விடும். நம்முடைய சுவாசக் காற்றும், மூச்சும் ரத்தினங்கள், பவளங்களை விட மதிப்பு மிக்கதாக ஆகி விடும்.
அது மட்டுமல்ல, இன்னொரு உண்மையையும் நீ நன்றாக அறிந்து வைத்திருக்கிறாய்.எந்த மந்திரக்கல்லைத் தொட்டதால் அவர்கள் சொக்கத்தங்கங்களாக ஆனார்களோ, அவர் கூட மக்களை படைத்தவனின் பக்கம் அழைப்பதற்காக செயற்களத்தில் குதிப்பதற்கு முன் தம்முடைய தேசத்தில் பெயர் பெற்ற வணிகராகத்தான் இருந்தார்.
ஆனால் அவர் தம் அதிபதியிடம் வாழ்க்கைக்கான பேரத்தைச் செய்த போது பணம் சம்பாதிப்பதற்கான வியாபாரத்தை கைவிட்டார். பணம் பண்ணுவதற்கு பதிலாக ஆளுமைகளை செதுக்குகிற வேள்வியில் தம்மை ஈடுபடுத்தி கொண்டார்.அவரால் செதுக்கப்பட்ட ஆளுமைகளுக்கு ஈடிணை இல்லை என்பதும் அவர்கள் மனித குல வரலாற்றிலேயே அரும்பெரும் பொக்கி~ங்களாக ஜொலித்தார்கள் என்பதும் உனக்கு தெரிந்ததே.
வலது கையால் சாப்பிட வேண்டும் என்கிற சுன்னத்தான நபிவழியை இன்று முஸ்லிம்கள் அனைவருமே நினைவில் வைத்திருக்கின்றார்கள். ஆனால் அண்ணல் நபிகளார் ( ஸல்) அவர்கள் தம்முடைய பொருள் முழுவதையும், செல்வங்கள் யாவற்றையும் அழைப்பு பணிக்காக செலவிட்டார்;;. பேரீச்சம் பாயைத் தவிர்த்து வேறெதனையும் விட்டுச் செல்லவில்லை என்கிற சுன்னத் - நபிவழி எத்தனை பேருடைய நினைவில் இருக்கிறது.
சத்திய மார்க்கத்தை உள்ளமும் மனமும் ஏற்றுக் கொண்டாலும் அதற்காக உழைக்கும் விஷயத்தில் அலட்சியப் போக்கு இருப்பது மிகப் பெரிய நோய் ஆகும். இந்த நோய்க்கு அடிமையாகி விட்டதாக எழுதி இருக்கிறாய். இந்த நயவஞ்சக நோய்தான் நம்முடைய ஒட்டு மொத்த சமூக வாழ்வை உயிரற்றதாக ஆக்கி விட்டிருக்கிறது. ஒட்டு மொத்த சமுதாயம் தவிட்டுக் குவியலாக ஆகி நிற்கிறது. யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் கையில் தடியை எடுத்துக் கொண்டு அந்த தவிட்டுக் குவியலில் ஏறி நின்று ஆதிக்கம் செலுத்துகின்ற காட்சிகள் அன்றாடம் நடக்கத்தானே செய்கின்றன. இந்த சமுதாயமும் தன்னுடைய மதிப்பு மிக்க கொள்கைகளில் ஈமான் வைத்துக் கொண்டே எடுப்பார் கைப்பிள்ளையாக இங்குமங்கும் அலைபாய்ந்து கொண்டிருக்கின்றது. இலக்கு நோக்கிப் பயணிக்காமல் நேரெதிர் திசையில் நடைபோடுகிறோமே என்கிற பிரக்ஞை கூட இல்லையே.
அன்பு நண்பா! நீ மிகவும் நிராசையடைந்து விட்டது போலத் தோன்றுகிறது. ஆண்டுகள் பல உருண்டோடி விட்ட பிறகு கூட இஸ்லாம் எங்குமே முழுமையாக நிலைநாட்டப்படவில்லையே என புலம்பி இருக்கின்றாய். இறையருள் மற்றும் இறையச்சத்தின் ஊற்றிலிருந்து எத்துணை தூரம் விலகிச் சென்று விட்டாய் என்பது இதிலிருந்து தெளிவாகிறது. நீ எந்தப் பாதையில் நடை போடத் தொடங்கினாயோ, அந்தப் பாதையின் தனித்தன்மை என்ன தெரியுமா? அங்கு நீ எப்போது நடந்தாய்? எவ்வளவு தூரம் நடந்தாய்? எதுவரை சென்றடைந்தாய்? என்றெல்லாம் கணக்கு போட்டுப் பார்க்கப்படுவதில்லை. எந்த வழியில் போக வேண்டுமோ அந்த வழி கண் முன்னால் இருக்கிறதா? என்றுதான் பார்க்கப்படும். அவன் கொடுத்த கால்கள் இப்போதும் நல்ல நிலைமையில்தான் இருக்கிறது. இல்லையெனில் தவழ்ந்தும், ஊர்ந்தும் செல்வோம். அதுவும் இயலவில்லையெனில் இலக்கை ஏறிட்டுப் பார்க்க கண்கள் இருக்கின்றனவே என்றுதான் யோசிப்போமே தவிர எந்த நிலையிலும் விரக்திக்கு இடம் தர மாட்டோம்.

அமெரிக்காவை அடக்கியாள்வோம்

அமெரிக்காவை அடக்கியாள்வோம்
சாவேஸ்
உலக நாடுகளை ஆளும் அரசாங்கங்களின் பிரதிநிதிகளே! எல்லோருக்கும் என் வாழ்த்தும் வணக்கமும். முதலாவதாக, இதுவரை உங்களில் யாரும் வாசித்தீரா இப்புதிய புத்தகத்தை? அவசியம் வாசிக்க வேண்டும் என உங்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
அமெரிக்கா மற்றும் உலகம் முழுவதும் உள்ள அனைவராலும் மிகுந்த மரியாதையோடு போற்றப்படும் அறிவுஜீவிகளில் ஒருவரான ‘நோம் சோம்ஸ்கி’ அண்மையில் எழுதி வெளியிட்ட அற்புதமான புத்தகம் இது. (புத்தகத்தை பொதுக்குழு கூட்டத்திற்கு முன்பாக உயர்த்திக் காட்டுகிறார்) ‘Hegemony Or Survival: Immoralist strategy of the United States’ என்பது அந்நூலின் பெயர். 20 ஆம் நூற்றாண்டில் உலகம் முழுவதும் என்னென்ன நிகழ்ந்தன? இப்போது என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது? நாம் வாழ்கிற இப்பூமிப்பந்தை பீடித்துள்ள பேரபாயங்கள், ஆபத்துகள் யாவை என்பன போன்றவற்றை விரிவாக விளங்கிக் கொள்ள இந்நூல் பெரிதும் துணை செய்கிறது.
அமெரிக்க சாம்ராஜ்யத்தின் ஏகாதிபத்திய, மேலாதிக்க வெறி உணர்வுகளும், அமைதியை நிலைநாட்டுதல் என்ற பெயரில் அது நடத்தி வரும் கபட நாடகங்களும் இப்புவியில் வாழும் மனித குலத்தைப் பூண்டோடு அழித்துவிடுமோ எனும் அச்சத்தைத் தோற்றுவித்துள்ளது. நாங்கள் இப்பேரபாயங்கள் குறித்து அனைவரையும் முன்னெச்சரிக்கை செய்யப் புறப்பட்டுள்ளோம்.
நம் தலைகளுக்கு மேல் வாளாகத் தொங்கிக் கொண்டிருக்கும் இப்பேரபாயத்தை எப்படியாவது தடுத்து நிறுத்தியாக வேண்டும் என அமெரிக்க மக்களையும், சர்வதேச மக்களையும் நாங்கள் தொடர்ந்து வற்புறுத்திக் கொண்டேயிருக்கிறோம். அருமையான இந்தப் புத்தகத்திலிருந்து பல பகுதிகளை உங்கள் முன் வாசித்துக் காட்ட வேண்டும் என்று விரும்பினேன். ஆயினும், நேரமின்மை காரணமாக நீங்களே இந்நூலை வாங்கிப் படிக்க வேண்டும் என்று நான் பரிந்துரை செய்கிறேன்.
மீண்டும் சொல்கிறேன். மிக எளிய நடையில் எழுதப்பட்டுள்ள மிகச் சிறந்த புத்தகம் இது. ஐ.நா.வின் அவைத் தலைவரான அம்மையார் அவர்களே! உங்களுக்கும் இது பரிச்சயமான புத்தகம் என நான் நம்புகிறேன். (பலத்த கைத்தட்டல்) ஆங்கிலம், அரபு, ஜெர்மனி மற்றும் ரஷ்ய மொழிகளிலும் இது கிடைக்கிறது. இந்நூலை முதலில் வாசிக்க வேண்டியவர்கள் நம் அமெரிக்க சகோதர, சகோதரிகளாவர். ஏனெனில், ஆபத்து அவர்களின் வீட்டுக்குள்ளேயே குடியிருக்கிறது.
பிசாசு உங்கள் வீட்டிற்குள்ளேயே தான் இருக்கிறது. அந்தப் பிசாசு நேற்று இந்த அவைக்கும் வந்திருந்தது. (சற்று விலகி நின்றபடி) அதனால் தான் இன்னமும் இந்த இடத்தில் துர்நாற்றம் வீசிக் கொண்டிருக்கிறது. அன்பிற்கினிய சகோதர, சகோதரிகளே! நான் பிசாசு என்று குறிப்பிடுகிற அமெரிக்க அதிபர் திருவாளர் ஜார்ஜ் புஷ் நேற்று, இந்த அவைக்கு வந்திருந்தார், அவர் இந்தச் சொற்பொழிவு மேடையில் ஏறி நின்று, சர்வ உலகத்துக்கும் தான் தான் ரட்சகர் என்ற நினைப்பில் இங்கு பேசிக் கொண்டிருந்ததை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். இந்த உலகயே விலைக்கு வாங்கி, தன் கைப்பிடிக்குள் சுருட்டி வைத்தவர் போல் அவர் பேசிக் கொண்டிருந்தார்.
அமெரிக்க அதிபர் நேற்று இந்த மேடையில் வெளியிட்ட கருத்துக்களை, எதற்கும் ஒரு மனநல மருத்துவரை அழைத்துப் பரிசீலித்தால் நல்லது என்று எனக்குத் தோன்றுகிறது. ஏகாதிபத்தியத்தின் சொந்தக்காரர் என்ற முறையில் சில கை வைத்தியங்களைப் பகிர்ந்து கொள்ளவே அவர் இங்கு வந்துள்ளார். உலக மக்களை ஆதிக்கம் செலுத்த வேண்டும் அவர்கள் மீதான மேலாதிக்கத்தையும், சுரண்டலையும் நியாயப்படுத்தும் எண்ணத்திலேயே இங்கு அவர் பேசிச் சென்றுள்ளார்.
வேண்டுமானால், ஆல்பிரட் ஹிட்ச்சாக்-கின் திரைப்படத்தில் இதனை ஒரு காட்சியாக இணைத்துக் கொள்ளலாம். “பிசாசின் சமையல் குறிப்புகள்” என்று அதற்கு நான் பெயர் சூட்ட விரும்புகிறேன். ஒரு புதிய ஜனநாயக பாணியை உலகுக்கு அறிமுகப்படுத்தப் போவதாக அவர்கள் கூறுகிறார்கள். அவர்களது ஜனநாயகம் எந்த லட்சணத்தில் இருக்கும் என்பது நமக்குத் தெரியாதா என்ன? அது மேட்டுக்குடியினரின் போலி ஜனநாயகம்.
இன்னும் தெளிவாகச் சொல்வதானால் வெடிகுண்டுகளாலும், ஆயுதங்களாலும் திணிக்கப்படுகிற இந்த ஜனநாயகம் மிக விசித்திரமானது. அரிஸ்டாட்டில் உள்ளிட்ட ஜனநாயகத்தை மிகச் சரியாகக் கடைபிடிக்கும் மேதைகளால் கூட புரிந்து கொள்ள முடியாத வேடிக்கையான, விநோதமான ஜனநாயகம் அது. ராணுவத்தினரையும் வெடிகுண்டுகளையும் ஏவி, இந்த உலகில் நீங்கள் எந்தமாதிரியான ஜனநாயகத்தை நிறுவப் போகிறீர்கள்?
அமெரிக்க அதிபர் நேற்று இதே அரங்கில் நம்மிடம் சொன்ன விஷயத்தை நான் மீண்டும் நினைவு கூறுகிறேன். “வன்முறையை ஏவி, அக்கிரமச் செயல்களைக் கட்டவிழ்த்து பயமுறுத்தினால் தான் தங்கள் மரியாதையை மீட்க முடியும்; வறுமையிலிருந்து மீள முடியும் என்று தீவிரவாதிகள் திட்டமிடுகின்றனர். உலகில் எங்கு திரும்பினாலும் நீங்கள் இந்தக் காட்சியைக் காணலாம்? அதாவது, எங்கு திரும்பினாலும் அவர் கண்களுக்கு மட்டும் தான் தீவிரவாதிகள் தெரிகிறார்கள். யாரைப் பார்த்தாலும் தீவிரவாதியாகவே பார்க்கிறார். உங்கள் நிறத்தைப் பார்த்ததும், ‘அய்யோ இவர் தீவிரவாதி’ எனக் கூச்சல் போடுகிறார். பொலிவியாவின் மேன்மை தாங்கிய அதிபர் ‘ஈவோ மொராலஸ்’ கூட இவர் கண்களுக்குத் தீவிரவாதியாகத் தெரிகிறார்.
என்ன செய்வது? ஏகாதிபத்தியவாதிகள் இப்படித்தான். அவர்கள் எல்லோரையும் தீவிரவாதியாகத்தான் பார்ப்பார்கள். இதுவெல்லாம் நாம் தீவிரவாதிகளாகி விட்டதால் நிகழ்ந்தவை அல்ல. தற்போதைய உலகம் விழித்துக் கொண்டு விட்டதாலும், உலக மக்கள் விழிப்புணர்வு பெற்று எழுச்சியோடு எழுந்து நிற்பதாலும் தான் இது நிகழ்கிறது என்றே எனக்குத் தோன்றுகிறது.
சர்வதேச சர்வாதிகாரியே! உன் வாழ்நாளின் மிச்ச மீதியுள்ள நாட்களையும் பகல் கனவு கண்டு தான் நீ கழிக்கப் போகிறாய் என நான் நினைக்கிறேன். ஏனெனில் நாங்கள் எல்லோரும் விழித்துக்கொண்டு விட்டோம். தேசங்களின் இறையாண்மையைக் காத்திடவும், சமத்துவம், சுயமரியாதையை நிலை நாட்டவும் நாங்கள் அனைவரும் ஓரணியில் திரண்டுவிட்டோம். ஆமாம். இனி நீங்கள் தாராளமாக எங்களைத் தீவிரவாதிகள் என்று அழைக்கலாம். ஏனெனில், நாங்கள் அனைவரும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து விட்டோம்.
அமெரிக்க அதிபர் மேலும் கூறினார்: “மத்திய கிழக்கில் வாழும் மக்களிடம் நான் நேரிடையாகக் கேட்டுக் கொள்வதெல்லாம் எங்கள் தேசத்திற்கு அமைதி வேண்டும் என்பதைத்தான்”. ஆமாம். யார் இல்லையென்று சொன்னது. நீங்கள் புரோங்க்ஸ், நியூயார்க், வாஷிங்டன், சான்டியாகோ, சான்பிரான்சிஸ்கோ உள்ளிட்ட அமெரிக்க நகரங்களின் வீதிகளில் நடமாடும் அமெரிக்க குடிமக்களிடம் சென்று, “உங்கள் தேசத்தின் இப்போதைய தேவை எதுவென்று” கேட்டுப் பாருங்கள். அவர்கள் அனைவரும் “அமைதி வேண்டும்” என்று தான் பதிலளிப்பார்கள்.
ஆனால், அமெரிக்க அரசு அமைதியை விரும்பவில்லை. அவ்வரசாங்கத்தைப் பொறுத்தவரை யுத்தங்களைத் திணித்து தன் சுரண்டலை, செல்வாக்கை, மேலாதிக்கத்தைச் செலுத்துவதையே அது விரும்புகிறது. இந்த லட்சணத்தில் அமைதி வேண்டுமாம் அமைதி?
ஈராக்கில் என்ன நடக்கிறது? லெபனானில் என்ன நடந்தது? பாலஸ்தீனத்தில் என்ன நிகழ்கிறது? கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக லத்தீன் அமெரிக்க நாடுகளிலும், உலகின் பிற நாடுகளிலும் நடந்து கொண்டிருப்பது என்ன? இவை போதாதென்று, இப்போது புதிய மிரட்டல்கள் வேறு. கடைசியாக வெனிசுலாவையும், ஈரானையும் மிரட்டத் தொடங்கியிருக்கிறது அமெரிக்கா.
அவர் லெபனான் மக்களிடம் சென்று, “உங்களோடு இருந்தவர்களும், ஏராளமான குடியிருப்புகளும் உங்கள் சமூகத்தாரும் போர்களில் எப்படி சீரழிந்து போனார்கள் என்பதைப் பார்த்தீர்களா? என்றிருக்கிறார். அவரால் மட்டுமே கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் இப்படியெல்லாம் பேச முடியும். பொய் சொல்வதற்கும் கூட கூச்சப்படாத மானங்கெட்ட பேர்வழி அவர்.
பெய்ரூட்டில் பொழிந்த குண்டுகள் அணு அளவு கூடக் குறி தவறாமல் மிகத் துல்லியமாகச் சென்று இலக்குகளைத் தகர்த்தனவே. இதுதான் எதிர்தாக்குதலின் லட்சணமா? எல்லாமே திட்டமிட்ட சதி.
அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து பாலஸ்தீன மற்றும் லெபனான் மக்களை ஈவு இரக்கமின்றி கொன்று குவிக்கிறது. சந்தேகமின்றி, இது அமெரிக்க ஏகாதிபத்தியமும், யூத பாசிசமும் இணைந்து நடத்திய இனப்படுகொலை தான். இவ்வளவையும் செய்து விட்டு, “யுத்தத்தில் உங்கள் வீடுகளும், குடியிருப்புகளும் நிர்மூலமாக்கப்பட்டதைக் கண்டு நாங்கள் மிகவும் வேதனையடைந்தோம்” என்று அக்கிரமத்திற்கு இரையான மக்களைப் பார்த்து நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர்.
அமெரிக்க அதிபர், உலக மக்கள் அனைவரிடமும் பேசவே இங்கு வந்துள்ளார். நான் சில குறிப்புகளைக் கொண்டு வந்துள்ளேன். காரணம், இன்று காலை நான் சில அறிக்கைகளை வாசித்தேன். அதில் அவர், ஆப்கான், லெபனான் மற்றும் ஈரான் மக்களிடமும் உரையாடியதாக அறிந்தேன்.
கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். அமெரிக்க அதிபர் உலக மக்களிடம் நேரடியாக உரையாடியது போல், அம்மக்களுக்கும் இவ்வரங்கில் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்குமனால், அவர்கள் அமெரிக்க அதிபரை நோக்கி என்ன பேசியிருப்பார்கள்? ஒடுக்கப்பட்ட தென் திசை நாடுகளின் (தென் அமெரிக்க) மக்கள் என்ன கூறியிருப்பார்கள் என்பதை அறிந்து கொள்ள உங்களைப் போன்றே எனக்கும் மிக ஆர்வமாக இருக்கிறது. எனக்குத் தெரிந்தவரை அவர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் “அமெரிக்க ஏகாதிபத்தியவாதியே, நீ உன் வீட்டுக்கே திரும்பிப் போ” என்றுதான் முழங்கியிருப்பார்கள். அவர்களிடமும் ஒரு ‘மைக்ரோஃபோன்’ கொடுத்துப் பாருங்கள். அநேகமாக அவர்கள் இப்படித்தான் உரத்துக் குரலெழுப்பியிருப்பார்கள்.
வருடந்தோறும இங்கு ஒன்று கூடுகிறோம். பரஸ்பரம் சந்தித்து உரையாடுகிறோம். நீண்ட ஆவணங்கள், அறிக்கைகள், புள்ளி விபரங்களைத் தயாரித்து வெளியிடுகிறோம். மிகச் சிறந்த உரைகளைக் கேட்கிறோம். நேற்று நடந்த ஆபேலின் உரையைப் போல.. ஏராளமான உரைகள். இலங்கை மற்றும் சிலி நாட்டு அதிபர்களின் உரைகளையும் கேட்டோம். எல்லாம் சரி தான்.
கடந்த ஆண்டு நாங்கள் மிக முக்கியமான நான்கு ஆலோசனைகளை முன்வைத்தோம். அவற்றை நாம் நிறைவேற்றியே தீரவேண்டும். அவற்றைப் பரிசீலிப்பதற்கான தொடர் விவாதங்கள் சர்ச்சைகள் நடைபெற வேண்டும்.
முதலாவது விரிவாக்கம் பற்றியது. ஐ.நா. பாதுகாப்பு அவையின் நிரந்தர மற்றும் தற்காலிக பிரிவுகளை விரிவுபடுத்த வேண்டும். அதன் மூலம் வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளையும் புதிய உறுப்பினர்களாக இணைத்து அவர்களுக்கும் நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து வழங்கப்பட வேண்டும்.
இரண்டாவது, உலக நாடுகளிடையே நிலவும் பூசல்களையும், மோதல்களையும் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். அதற்குத் தேவையான தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதுடன், ஆக்கப்பூர்வமான வழிகளையும் ஆராய வேண்டும்.
மூன்றாவது, ஜனநாயகத்திற்கு விரோதமான ‘வீட்டோ’ அதிகாரத்தை ரத்து செய்ய வேண்டும். பாதுகாப்பு அவையின் முடிவுகளில் தலையிட்டு அதைத் தடுத்து நிறுத்தும் இந்த ‘வீட்டோ’ அதிகாரத்தை முற்றிலுமாக ஒழித்துக்கட்ட வேண்டும்.
இதற்கு அண்மைக்கால நிகழ்வு ஒன்றே எடுத்துக்காட்டு. ஐ.நா. பாதுகாப்பு சபையின் முடிவைக் கூடப் புறந்தள்ளிவிட்டு, லெபனான் மீது போர் தொடுக்க இஸ்ரேலுக்கு அனுமதி அளித்தது. அமெரிக்காவின் இந்த அராஜகமான ‘வீட்டோ’ அதிகாரம்தானே? பாதுகாப்பு அவையின் தீர்மானம் தூக்கி வீசப்பட்டபோது நாம் என்ன செய்தோம்? அனைவரும் கைகட்டி, வாய் பொத்தி நின்று வேடிக்கை தானே பார்த்தோம்?
நான்கவதாக, ஐ.நா. பொதுச் செயலாளரின் அதிகாரங்களை வலுப்படுத்த வேண்டும். நமது பொதுச் செயலாளர் நேற்று அவரது ‘பிரிவு உரையை’ இங்கு நிகழ்த்தினார். அப்போது, கடந்த 10 ஆண்டுகளாக நிலைமைகள் படுமோசமாக மாறியுள்ளது என அவரே ஒப்புக் கொண்டார்.
மனித உரிமை மீறல், வறுமை, பசி பட்டினி, வன்முறை ஆகியவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவெல்லாம் அமெரிக்காவின் ஆதிக்க - அராஜக நடவடிக்கைகளாலும், ஐ.நா. சபை பலவீனப்பட்டு, வீழ்ச்சியடைந்ததாலும் ஏற்பட்ட துயரங்களாகும்.
எங்கள் குரல் சுதந்திரமானது, அது கண்ணியத்தைக் கடைப்பிடிக்கிறது. சமாதான முயற்சிகளை முன்னிலைப்படுத்துகிறது. அது சர்வதேச நலனை மறு கட்டுமானம் செய்ய வேண்டும் என விரும்புகிறது. அது நாம் வாழும் இப்பூமிப்பந்தின் மீதான ஆதிக்க சக்திகளின் தாக்குதல்களை, அக்கிரமங்களை வன்மையாகக் கண்டிக்கிறது. இப்படித்தான் வெனிசுலா தனது தனித்துவத்தையும், துணிச்சலையும் வெளிப்படுத்தியது.
பாதுகாப்பு அவையில் வெனிசுலா தற்காலிக உறுப்பினராகத் தேர்வு பெற்றிருந்த சமயம், அப்படி நாங்கள் தேர்வு பெற்றுவிடக் கூடாது என்பதற்காக அமெரிக்கா எங்களுக்கு எதிராகத் திரும்பி, எங்கள் மீது தாக்குதல் தொடுத்தது. பாதுகாப்பு அவையில் நாங்கள் இடம் பெறுவதை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காக அமெரிக்கா பகிரங்கமான தாக்குதலை அரங்கேற்றியது.
அமெரிக்க சர்வாதிகாரம் சத்தியத்தைக் கண்டும், சுதந்திரத்திற்காக எழும் குரல்களைக் கண்டும் அஞ்சுகிறது. அதனால் தான் நம்மைத் தீவிரவாதிகள் என்று அழைக்கத் தலைப்படுகிறது. உண்மையில் அவர்கள் தான் தீவிரவாதிகள். இவை எல்லாவற்றையும் மீறி வெனிசுலாவுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பிய அனைத்து நாடுகளுக்கும் இத்தருணத்தில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாக்கெடுப்பு ரகசியமாகத்தான் நடந்தது, எனினும் அமெரிக்கா தனது எதிர்ப்பைக் காட்டியவுடன் பல நாடுகளின் ஆதரவும் எங்களுக்கே என்று உறுதியானது. அவர்களது ஆதரவு எங்களுக்கு ஊக்கத்தையும் தைரியத்தையும் தந்தது. Mercosur ஒரு Block என்ற நிலையில் அதன் ஆதரவைத் தந்தது. பிரேசில், அர்ஜென்டினா, வெனிசுலா, பராகுவே, உருகுவே ஆகியவை இந்த பிளாக்கின் உறுப்பு நாடுகள் ஆகும். ஏராளமான லத்தீன் அமெரிக்க நாடுகளும் எங்களை ஆதரித்தன. அரபு நாடுகளின் கூட்டமைப்பான ‘அரபு லீக்’கும் தனது ஒட்டு மொத்த ஆதரவையும் எங்களுக்கே தந்தது.
ஆப்பிரிக்கன் யூனியன் மற்றும் கரீபியன் சகோதரர்களுக்கும், அரபு நாட்டுச் சகோதரர்களுக்கும் இத்தருணத்தில் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல, அனைத்து ஆப்பிரிக்க நாடுகளும் வெனிசுலாவுக்கு ஆதரவுக் கரம் நீட்டின. ரஷ்யாவும், சீனாவும் கூட ஆதரவு தந்தன. சத்தியத்தைக் கைப்பிடிக்கும் எங்கள் நாட்டு மக்களின் சார்பாகவும் நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாதுகாப்பு அவையில் உறுப்பினர் அந்தஸ்து கிடைத்தால், வெனிசுலா தனது சொந்த விருப்பு வெறுப்புகளை விட, உலக மக்களின் விருப்பங்-களையும், குரல்களையுமே வெளிப்படுத்தும். மேலும், கண்ணியத்தையும், சத்தியத்தையும் நாங்கள் உயர்த்திப் பிடிப்போம் என நான் உறுதியளிக்கிறேன். இதற்கெல்லாம் அப்பால், அம்மையார் அவர்களே, நாங்கள் நல்லெண்ணத்துடன் இருக்க சில காரணங்கள் இருக்கிறது என்று நான் கருதுகிறேன்.
“எத்தனைப் போர்கள்?எத்தனை தாக்குதல்கள்?அவற்றையும் மீறி,திட்டமிட்ட போர்களுக்கும்உயிர் சேதங்களுக்கும் அப்பால்ஒரு புதுயுகம்விடிந்து கொண்டிருக்கிறது” என்றார் ஓர் கவிஞர்.
சில்வியா ரோட்ரிக்ஸ் கூறுவதைப் போல, “இந்த புதிய யுகம் ஓர் இதயத்தைப் பெற்றெடுத்துள்ளது”. சிந்தித்து செயல்படுவதற்கான மாற்று வழிகள் உருவாகிவிட்டன. வித்தியாசமாக சிந்திக்கக்கூடிய இளைய தலைமுறை வந்து விட்டது. இவையெல்லாம் கடந்த பத்தாண்டுகளில் நிகழ்ந்த மகத்தான சாதனைகளாகும்.
‘வரலாற்றின் முடிவு’ என்பது தவறான கற்பனையாகும். பாக்ஸ் அமெரிக்கானா மற்றும் முதலாளித்துவ புதிய தாராளமயம் என்பது தவறான பாதைகள் என்பது தெரிந்துவிட்டதால் அவை குறித்த பிம்பங்கள் சிதைந்துவிட்டன. இந்த வழிமுறைகள் வறுமையை மட்டும் தான் தோற்றுவிக்கும் என்பதும் அனைவருக்கும் தெரிந்து விட்டது. இனிமேல் அவற்றை யாரும் நம்பவோ ஏற்றுக்கொள்ளவோ தயாரில்லை. இனி நாம் செய்ய வேண்டியதெல்லாம் புதிய உலகத்தை வரையறுக்கத் தொடங்குவதாகும். எங்கும் புதிய விடியல் புலரத் தொடங்கிவிட்டது.
ஆப்பிரிக்காவிலும், ஐரோப்பாவிலும், லத்தீன் அமெரிக்காவிலும் இந்த மாற்றத்தின் துடிப்பை நீங்கள் காணலாம். இந்த நம்பிக்கையளிக்கும் புதிய விடியல் எங்கும் பரவ வேண்டும் என நான் விரும்புகிறேன். இனி நம்மை நாம் வலிமை மிக்கவர்களாக உருமாற்ற வேண்டும். தேவைப்பட்டால், போரிடுவதற்கான மன உறுதியை - மனத் திண்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு வீரம் செறிந்த உலகை நாம் கட்டமைக்க வேண்டும். இந்தப் போராட்டத்தில் வெனிசுலாவும் இணைய விரும்புகிறது. இதனாலேயே நாங்கள் மிரட்டப்படுகிறோம். வெனிசுலாவில் ஆட்சி கவிழ்ப்பு நிகழ்த்தவும் ஓர் எதிர்ப்புரட்சி வெடிக்கவும் அமெரிக்கா பணத்தை வாரி இரைத்து, தொடர்ந்து திட்டங்கள் தீட்டி முயற்சித்து வருகிறது.
மிருகத்தனமாகப் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஓர்லான்றோ லெட்டெலியர் குறித்து சில நிமிடங்களுக்கு முன் அதிபர் மீஷேல பாஷெல் இங்கு நினைவு கூர்ந்தார். மற்றொரு விஷயத்தையும் நான் குறிப்பிட விரும்புகிறேன். இக் கொடூரச் செயலைப் புரிந்தவர்கள் இன்றும் சுதந்திரமாகத் திரிகின்றனர். அவர்கள்தான் அமெரிக்காவின் சி.ஐ.ஏ. கொலையாளிகள். அவர்கள்தான் பயங்கரவாதிகள். ஓர் அமெரிக்கக் குடிமகனும் இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.
இன்னும் சில நாட்களில் மற்றொரு வருடாந்திர நினைவு நாள் நம்மை வந்தடையும். அது, கியூபா விமானம் பயங்கரவாதிகளால் குண்டு வைத்து தகர்க்கப்பட்டதன் 30 ஆவது ஆண்டு நினைவு நாள் ஆகும். (கியூபானா டி அவியாஸி-யோண் ஏர்லைனர் எனும்) அவ்விமானத்தில் பயணித்த 73 அப்பாவிகள் கொல்லப்பட்டனர். குண்டு வைத்த தீவிரவாதி தப்ப முயன்றபோது சி.ஐ.ஏ. யும், அன்றைய அமெரிக்க அரசாங்கமும் அவனுக்கு உதவின. அவன் கொஞ்ச நாட்கள் வெனிசுலா சிறையில் அடைக்கப்பட்டிருந்தான். இப்போது இந்நாட்டு அரசின் முழுப் பாதுகாப்பில் உலா வருகிறான். அவனே குற்றத்தை ஒப்புக் கொண்ட பிறகும்கூட இந்த விஷயத்தில் அமெரிக்க அரசு இரட்டை வேடம் போடுகிறது. அமெரிக்காதான் பயங்கரவாதத்திற்குப் பாதுகாப்பு அளிக்கிறது. வெனிசுலா பயங்கரவாதத்திற்கும், ஆக்கிரமிப்புகளுக்கும் எதிராக மனத் திண்மையுடன் போராடி, அமைதியை நிலை நாட்டப் பாடுபடும் சக்தியாகும்.
அப்படி பாதுகாக்கப்பட்ட பயங்கரவாதியின் பெயர் லூயிஸ் பொஸாட காரிலஸ். அவனுடன் வெனிசுலாவிலிருந்து தப்பித்த மற்ற குற்றவாளிகளும் இங்குள்ளவர்களின் பாதுகாப்பில் பத்திரமாக உள்ளனர். அவர்கள் பல தூதரகங்களைத் தகர்த்த குற்றவாளிகளாவர். வெனிசுலாவில் ஆட்சிக் கவிழ்ப்பின்போது பொதுமக்களைக் கொன்ற பாவிகள். என்னையும் கடத்திக் கொண்டு போய் கொலை செய்ய முயற்சித்தனர். ஆனால், கடவுள் மண்ணுலகுக்கு இறங்கி வந்தார் என்றே நான் நம்புகிறேன். மக்களும், ராணுவமும் தெருவில் இறங்கிப் போராடினர். அதனால் தான் இப்போது உங்கள் முன் நிற்கிறேன்.
அன்று ஆட்சியைக் கவிழ்க்க முயன்றவர்களையும் அமெரிக்காதான் பாதுகாத்து வருகிறது. பயங்கரவாதிகளைப் பாதுகாக்கும் அமெரிக்க ஆட்சியாளர்களின் இதுபோன்ற நடவடிக்கைகளை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
கியூபா பற்றி நான் இங்கு குறிப்பிட்டிருந்தேன். சில நாட்களுக்கு முன் நாங்கள் அங்கே சென்றிருந்தோம். அங்கிருந்து மகிழ்ச்சியோடு தான் இங்கு வந்திறங்கினோம். அங்கே ஒரு புதிய யுகம் பிறந்து கொண்டிருப்பதை நீங்கள் காணலாம்.
150 நாடுகளைக் கொண்ட அணி சேரா நாடுகளின் கூட்டமைப்பு வரலாற்று சிறப்புமிக்க தீர்மானங்களை அங்கு நிறைவேற்றியது. பயப்படாதீர்கள். நான் அதனை இங்கு வாசிக்கப் போவதில்லை. 50 க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்களால் முன்மொழியப்பட்ட ஏராளமான தீர்மானங்கள் இங்குண்டு. அனைத்தும் மனம் திறந்த விவாதங்கள் மூலம் எடுக்கப்பட்ட முடிவுகளாகும்.
சில வாரங்களாக உலகின் தெற்குப் பகுதியின் தலைநகரமாக ஹவானா விளங்கியது. அணிசேரா நாடுகளின் கூட்டமைப்புக்கு நாம் புத்துயிர் அளித்துவிட்டோம். அந்தக் கூட்டமைப்பை முன்னெடுத்துச் செல்ல உங்களது முழுமையான ஆதரவையும், ஒத்துழைப்பையும் கோருகிறேன். பிரபலமான ஒரு நாட்டின் அக்கிரமத்தையும் அராஜகப் போக்கையும் சதித்திட்டங்களையும் ஒரு முடிவுக்குக் கொண்டு வர எங்களுக்கு நீங்கள் துணிச்சலைத் தாருங்கள். இனியொரு விதி செய்வோம்.
உங்களுக்கே தெரியும். பிடல் காஸ்ட்ரோ தான் அணிசேரா நாடுகளின் தலைவர். அடுத்த மூன்று ஆண்டுகளுக்கும் அவரே அணி சேரா நாடுகளின் கூட்டமைப்பை வழிநடத்தும் தலைவராக நீடிப்பார். அவர் திறம்பட செயலாற்றுவார் என்று நாம் உறுதியாக நம்புவோம். அதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம்.எப்படியாவது ‘பிடல் செத்துவிடுவார்’ என அவர்கள் நினைத்தனர். இப்போது மீண்டும் அவர் தனது கரும்பச்சை உடையில் காட்சியளிக்கிறார். இதோ! அவரே அணிசேரா நாடுகளின் முன்னணிப் போராளியாகவும் உள்ளார்.
எனதன்புத் தோழர்களே! தலைமை தாங்கும் அம்மையார் அவர்களே! தெற்குலகிலிருந்து ஒரு புதியபடை புறப்பட்டுள்ளது. நாங்கள் தெற்கிலிருந்து வந்தவர்கள். இந்த அறிக்கைகளுடன், இந்த எண்ணங்களுடன், இந்த விமர்சனங்களுடன் நான் எனது கோப்பை மூடுகிறேன். இந்தப் புத்தகத்தை நான் எடுத்துச் செல்கிறேன். மறந்து விடாதீர்கள். அனைவரும் இப்புத்தகத்தை அவசியம் வாசிக்க வேண்டும் என மீண்டும் மீண்டும் உங்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
நாம் வாழும் இந்தப் பூமிப் பந்தை ஏகாதிபத்தியத்தின் பிடியிலிருந்து விடுவிக்க வேண்டுமெனில், நாம் புதிய வழிகளை கண்டுபிடித்தாக வேண்டும். அதிகம் தாமதியாமல் இந்த நூற்றாண்டிலேயே அந்தக்காட்சியை - அந்தக் காலத்தை நாம் விரைவாக எட்டிவிடுவோம் என்ற நம்பிக்கை எனக்குண்டு.
நவீனப்படுத்தப்பட்ட ஐ.நா.வின் அடிப்படைக் கொள்கைகளைப் பின்பற்றி, அமைதி தவழும் ஓர் புதிய உலகை இனி நமது குழந்தைகளும் பேரக்குழந்தைகளும் காண்பர். புனரமைக்கப்பட்ட புதிய ஐ.நா.வை உலகின் தென் பகுதிக்கு இடம் மாற்றம் செய்ய வேண்டும். அதற்குப் பொறுத்தமான இடமாக வெனிசுலாவை நாங்கள் முன்மொழிகிறோம்.
உங்களுக்குத் தெரியும் என நினைக்கிறேன். எனது மருத்துவர் விமானத்திலேயே தங்க வைக்கப்பட்டுள்ளார். எனது பாதுகாப்பு அதிகாரியும் அவ்விமானத்தில் அடைக்கப்பட்டுள்ளார். அவர்கள் இங்கு வரவோ, ஐ.நா. மாநாட்டில் பார்வையாளர்களாகக் கலந்து கொள்ளவோ அனுமதிக்கப்படவில்லை. இதுவும் பிசாசின் அதிகார துஷ்பிரயோகம் தான். இன்னமும் இங்கே கந்தக நெடி வீசிக்கொண்டிருக்கிறது. இருப்பினும் நம்பிக்கையோடு உங்கள் அனைவரையும் வாழ்த்தி விடை பெறுகிறேன்

Six C's of Character - Yasir Fazaga