Search This Blog

Sunday, November 12, 2006

நமது கடமை

அல்லாஹ் மனிதனை படைத்ததன் நோக்கத்தை பற்றி குறிப்பிடுகிறான்:
ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை. (திருமறை 51:56)

இதிலிருந்து நமது வாழ்வின் நோக்கமே வணக்கம்தான் என்பது தெளிவாகிறது. சில இபாதத்களை மட்டும் செய்தால் போதும். நான் எனது இறைவனை முழுமையாக வணங்கி விட்டேன் என்ற நமது மனப்பான்மை தவறானது என்பதை இவ்வசனம் சுட்டிக்காட்டுகிறது.
உதாரணத்திற்கு மிக முக்கிய கடமையான தொழுகையைப்பற்றி அல்லாஹ்; குறிப்பிடுகிறான்:
நிச்சயமாக தொழுகை (மனிதரை) மானக்கேடானவற்றையும் தீமையையும் விட்டு விலக்கும். குர்ஆன் 29:45

இதிலிருந்து தொழுகை நமது வாழ்வு வணக்கமாக மாறுவதற்கான பயிற்சி என்பது தெளிவாகிறது.
நாம் தொழுகையை மட்டும் வணக்கமாக கருதுவோமானால் ஒரு நாளில் அரை மணி முதல் ஒரு மணி நேரம் மட்டுமே நாம் தொழுகைக்காக ஒதுக்குகிறோம். அப்படியென்றால் மற்ற நேரங்களில் அல்லாஹ்வை வணங்குவதற்கு என்ன பொருள்?
தொழுகையில் நாம் எப்படி அல்லாஹ்வை மட்டும் அக்பராக ( மிகப் பெரியவன்) ஏற்று நடக்கிறோமோ அது போல் நாம் நமது மற்ற விவகாரங்களிலும் அல்லாஹ்வை மட்டும் அக்பராக ஏற்றுக் கொள்ள வேண்டும். நமது தனிப்பட்ட வாழ்வில், குடும்ப வாழ்வில், வியாபாரத்தில், அரசியலில் , ஆன்மீகத்தில் என அனைத்து விசயங்களிலும் அல்லாஹ்வை அக்பராக ஏற்று அவனுடைய கட்டளைகளுக்கு மட்டும் கீழ்படிந்து நடக்க வேண்டும். இந்த விசயங்களில் அல்லாஹ்வுடைய கட்டளைக்கு மாற்றமாக நமது மனோஇச்சை, குடும்பத்தவர், தோழர்கள், தலைவர்கள் மற்றும் மார்க்கச் சட்டத்திலிருந்து மாறுபடும் இதர கொள்கைகள் போன்றவற்றிற்கு அடிபணிந்து விடக் கூடாது. அடுக்களை முதல் அரசியல் வரை அல்லாஹ்வின் கட்டளைகள்தான் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அதனைத்தானே அல்லாஹ் வணக்கம் என்கிறான்.. அதற்காகத் தானே நம்மையும் ஜின் வர்க்கங்களையும் படைத்தேன் என்றும் சொல்கிறான்..

இதைப்பற்றி நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிடும்போது,
“எவர் தம் விருப்பத்தை நான் கொண்டு வந்த நெறியைப் பின்பற்றும் வண்ணம் அமைத்துக் கொள்ளவில்லையோ – அவர் முழுமையாக ஈமான் கொள்ளவில்லை” என தெளிவுபடுத்துகிறார்கள்.
இதற்கு நாம் அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்பட்ட, இந்த மார்க்கமான இஸ்லாத்தை நிலைநாட்ட பாடுபட வேண்டும். இந்த இகாமத்தே தீன் என்ற மாபெரும் பணியை அல்லாஹ்; நமக்கு கட்டளையாக குறிப்பிடுகிறான்.

நூஹ{க்கு எதனை அவன் உபதேசித்தானோ, அதனையே உங்களுக்கும் அவன் மார்க்கமாக்கியிருக்கின்றான். ஆகவே (நபியே) நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிப்பதும், இப்றாஹீமுக்கும், மூஸாவுக்கும் , ஈஸாவுக்கும் நாம் உபதேசித்ததும் என்னவென்றால். ''நீங்கள் (அனைவரும்) சன்மார்க்கத்தை நிலை நிறுத்துங்கள், நீங்கள் அதில் பிரிந்து விடாதீர்கள்" என்பதே (42:13)

இந்த கட்டளையின்படி நாம் செயல்பட முன்வரும்போது நமது வாழ்வு வணக்கமாக மாறும் - இன்ஷா அல்லாஹ். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹிராவிலிருந்து வெளியில் வந்ததிலிருந்து அரபுலகம் முழுதும் இந்த மார்க்கம் நிலைநாட்டப்படும் வரை இதற்காக கடுமையாக உழைத்தார்கள். இபாதத்களோடு தங்களது வாழ்வை மட்டுப்படுத்தி கொள்ளாமல் வாழ்க்கையையே இபாதத் ஆக மாற்றி நமக்கு முன்மாதிரியாக வாழ்ந்து காட்டி இருக்கிறார்கள்.
இந்த மார்க்கத்தை நிலைநாட்டும் பணியில் நாம் செய்ய வேண்டிய பணிகள் ஏராளம் உள்ளது. அதில் முதலாவதாக நாம் நம்மை முற்றிலும் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு வாழும் முஸ்லிம்களாக மாற்றிக் கொள்ள வேண்டும்.

மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள். (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள். தீயதை விட்டும் விலக்குகிறீர்கள். இன்னும் அல்லாஹ்வின்மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள். 3:110
என குர்ஆன் குறிப்பிடுவது போல் நன்மையை ஏவி தீமையை தடுக்க கூடியவர்களாக நாம் மாற வேண்டும். நன்மை என்பதற்கு திருக்குர்ஆனின் சிறந்த விரிவுரையாளரான இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் “”லா இலாஹ இல்லல்லாஹ்” என குறிப்பிடுகிறார்கள். எனவே இந்த மார்க்கத்தை பிற சமுதாய மக்களுக்கு தீவிரமாக, நளினமாக நமது சொல்லாலும், செயலாலும் எடுத்து இயம்பும் பணியில் நம்மை நாம் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். அப்போதுதான் நாம் நமது கடமையை நிறைவேற்றியவர்களாக, ஈருலக வெற்றியாளர்களாக மாற முடியும்.
அகிலத்தின் அருட்கொடை, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனைத்து மக்களும் இஸ்லாத்தை ஏற்று சுவனம் செல்ல வேண்டுமே என மிகவும் கவலைப்பட்டார்கள். அல்லாஹ்வே “அவர்கள் முஃமின்களாகாமல் இருப்பதற்காக (துக்கத்தால்) உம்மை நீரே அழித்துக்கொள்வீர் போலும்!”(குர்ஆன் 26:3) என கூறும் அளவுக்கு கவலைப்பட்டார்கள். நாமும் இந்த பணியை அதே எண்ணத்துடன், அல்லாஹ்வின் திருப்தியை பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் செய்ய வேண்டும். ஒவ்வொரு முஸ்லிமல்லாத சகோதரனை பார்க்கும்போதும் அவன் நரகத்தில் நின்று கொண்டிருக்கிறான், அவனை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த சத்திய மார்க்கத்தை அறிமுகப்படுத்த வேண்டும்.

இவ்வாறு நாமனைவரும் ஒன்றிணைந்து இந்த மார்க்கத்தை நிலை நாட்டும் பணியில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ளும் போது இன்ஷா அல்லாஹ் நிச்சயமாக நாம் ஈருலகிலும் வெற்றி பெறுவோம். வல்ல ரஹ்மான் இதற்கு அருள் புரிவானாக!
நீங்கள் தைரியத்தை இழக்காதீர்கள். கவலையும் கொள்ளாதீர்கள். நீங்கள் முஃமின்களாக இருந்தால் நீங்கள் தாம் வெற்றியாளர்கள்.(குர்ஆன் 3;:139)

Six C's of Character - Yasir Fazaga